Thursday Sep 19, 2024

கோரம்பள்ளம் மஹா பிரத்தியங்கிராதேவி திருக்கோயில், தூத்துக்குடி

முகவரி :

கோரம்பள்ளம் மஹா பிரத்தியங்கிரா தேவி திருக்கோயில்,

அய்யனடைப்பு, கோரம்பள்ளம்,

தூத்துக்குடி மாவட்டம் – 628008.

இறைவி:

ஹா பிரத்தியங்கிரா தேவி

அறிமுகம்:

தூத்துக்குடிக்கு அருகே உள்ள கோரம்பள்ளம் அய்யனடைப்பு சித்தர் நகரில் பிரமாண்டமான வடிவில் மஹா பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ளது. கேரளாவின் கட்டிடக்கலையி வடிவமைக்கப்பட்டுள்ள இவ்வாலயத்தில் பிரத்தியங்கரா தேவி மற்றும் காலபைரவருக்கு ஒரே கல்லிலான 11 அடி உயரத்தில் தத்ரூபமான வடிவில் சிலை அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன. தூத்துக்குடி திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் கோரம்பள்ளம் அருகே அமைந்துள்ள இத்திருக்கோயிலுக்கு செல்ல தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்திலிருந்து கோரம்பள்ளம் பஸ் நிலையம் சென்று அங்கிருந்து ஆட்டோ, கார், மினி பஸ் வசதி மூலம் கோயிலையடையலாம்.

புராண முக்கியத்துவம் :

       அகங்காரமும் ஆணவமும் கொண்ட இரண்யகசிபுவை நரசிம்மர் அவனை கொன்று அவனது ஆணவத்தை அழித்தார். சம்ஹாரம் முடிந்த பின்பு நரசிம்மரின் உக்கிரத்தை தணிக்க உருவாக்கப்பட்ட சரபேஸ்வரரின் இரு இறக்கைகளில் ஒன்றாக பிரத்தியங்கிராதேவி பத்ரகாளி உருவாக்கப்பட்டாள். சிங்க முகத்துடன் ஆயிரம் திருமுகங்களும், 2 ஆயிரம் கைகளும், சிவப்பேறிய கண்கள் மூன்றும், கனத்த சரீரம், கரிய நிறம், நீல நிற ஆடை அணிந்து விஸ்வரூபத்தை கொண்ட இவள் கருணை உள்ளம் கொண்டவள்.

ஆலயத்தில் மூலவராக மகா பிரத்தியங்கிராதேவி வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். பத்து கரங்களுடன் கூடிய விஸ்வரூபக் கோலத்திலும், மகாகால பைரவர் மேற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளார். ஆலய வளாகத்தில் தட்சிணாமூர்த்தி குரு மகாலிங்கேஸ்வரர் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். ஆகம விதிப்படி நிர்மாணம் செய்யப்பட்டு இவரை வணங்கினால் குழந்தைபேறு தொழில் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

நம்பிக்கைகள்:

இங்குள்ள மகா கால பைரவரை வணங்கும் பக்தர்களுக்கு இழந்த செல்வங்கள் திரும்பக் கிடைக்கும். முன்னோர்களின் சாபம் நீங்கி வாழ்வில் மேன்மை கிட்டும். ஞாயிற்றுக்கிழமை தோறும் கால பைரவர் சரபேஸ்வரர் ஹோமத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. மகா பிரத்தியங்கிரா தேவியின் வியாழக்கிழமை காலை சந்தனகாப்பு அலங்காரத்துடன் எள்ளுப்பூ செவ்வரளி மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி வணங்கினால் புத்திர பாக்கியம் கிட்டும். வெள்ளிக்கிழமை அன்னையை தாமரை மலர் அணிவித்து சந்தனகாப்பு அலங்காரம் செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கி நல்ல வரன் கிடைக்கும். அன்னையை பாலாபிஷேகம் செய்து வணங்கினால் நாகதோஷம் நீங்கும். காலபைரவரை புனுகு பூசி தாமரை மலர் சூட்டி வணங்கினால் திருமணத்தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

சிறப்பு அம்சங்கள்:

 ஆலய வளாகத்தில் மங்களம் தரும் சனீஸ்வரர்ர், மகாலட்சுமி, சரஸ்வதி, சரபேஸ்வரர், பஞ்சமுக கணபதி, சூலினி துர்கா, சிம்ம கணபதி, முனீஸ்வரர், குருபகவான், தட்சிணாமூர்த்தி, நவகிரகங்கள், காளி ஆகிய தெய்வங்களும் அருள்பாலித்து வருகின்றனர். சனிக்கிழமைதோறும் ஆலயத்திலுள்ள மங்களம் தரும் சனீஸ்வர பகவானுக்கு வழிபாடுகள் நடக்கின்றன. இயற்கையாகவே இடுகாடு-சுடுகாடு எதிரில் கோயில் அமைந்துள்ளது கூடுதலான சிறப்பு அம்சமாகும். இங்குள்ள தேவியை வணங்கினால் திருமணத்தடை நீங்கும். புத்திர பாக்கியம் கிட்டும். கொடிய நோய்கள் விலகி போகும். எதிரிகளின் சூழ்ச்சிகள் காணாமல் போய்விடும். ஏவல் பில்லி சூனியம் போன்ற கெடுதல்கள் அண்டாது. அரசியலில் மேன்மை கிடைக்கும். அரசு வேலை பதவி உயர்வு கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

உலகம் முழுவதும் நோய் நொடியின்றி நலமாக வாழ நாடு முழுவதும் நல்ல மழை பெய்து பசுமை வளம் சிறக்க உலகிலேயே முதல்முறையாக 2013 கிலோ மிளகாய் வற்றல் யாகம் நடத்தப்பட்டது. இதுபோன்று மிளகாய் வற்றல் யாகம், பச்சை மிளகாய், எலுமிச்சை பழம் போன்ற சிறப்பு யாகங்கள் ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.

திருவிழாக்கள்:

மாதம் தோறும் அஷ்டமி அமாவாசை பவுர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் கூடிய வழிபாடு நடத்தப்படுகிறது ஆடித் திருநாள் தை அமாவாசை தமிழ்வருடப்பிறப்பு சித்ரா பவுர்ணமி நாட்களில் சிறப்பு யாக துடன் கூடிய வழிபாடுகள் நடத்தப்படுகின்றன ஆண்டுதோறும் தமிழ் வருடப் பிறப்பான சித்திரை முதல் நாள் தேவிக்கு திருவிழா நடக்கிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கோரம்பள்ளம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தூத்துக்குடி

அருகிலுள்ள விமான நிலையம்

தூத்துக்குடி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top