Thursday Sep 19, 2024

எழுச்சூர் ஸ்ரீ நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி :

ஸ்ரீ நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில்,

நம சிவயா டிரஸ்ட், 5/9, 2வது தெரு,

ராமகிருஷ்ணா தெரு, எழுச்சூர் சிட்லபாக்கம்,

காஞ்சிபுரம் மாவட்டம் – 631605.

தொலைபேசி: +91 – 44 – 2223 3857

மொபைல்: +91 – 94425 55187 / 93806 34880 / 9442555187

மொபைல்: +91 – 94443 49009 / 9840016882 / 9444046225

இறைவன்:

நல்லிணக்கீஸ்வரர்

இறைவி:

தெய்வநாயகி

அறிமுகம்:

 தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எழுச்சூர் கிராமத்தில் அமைந்துள்ள நல்லினக்க ஈஸ்வரர் கோயில், சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள முக்கிய தெய்வம் ஸ்ரீ நல்லிணக்கீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது. நல்லிணக்கீஸ்வரர் என்றால் ‘இணக்க கடவுள்’ என்று பொருள். இங்குள்ள இறைவி ஸ்ரீ தெய்வநாயகி. எழுச்சூர், சென்னைக்கு தென்மேற்கே 57 கிமீ தொலைவில் தாம்பரம் மற்றும் காஞ்சிபுரத்தை இணைக்கும் சாலையில் அமைந்துள்ள ஒரு சிறிய அழகான கிராமம். இக்கோயில் சுமார் 1200 ஆண்டுகள் பழமையானது. ஒரு பெரிய பாம்பு இந்த கோவிலுக்கு தினமும் 2 முறை வந்து சிவன் சிலைக்கு பிரதக்ஷிணை செய்வதாக கூறப்படுகிறது.

புராண முக்கியத்துவம் :

       விஜய நகரப் பேரரசின் (நரஸா-திப்பாஜி தம்பதிக்குப் பிறந்த) மன்னன் வீரநரசிம்மா கி.பி. 1429-ஆம் வருடம் காஞ்சிப் பகுதியில் உள்ள எழுச்சூர் உட்பட சில கிராமங்களை காஞ்சி காமகோடி மடத்தைச் சேர்ந்த 54-வது சங்கராச்சார்யரான வியாசாசல மஹாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு தானமாக வழங்கினான் என கண்டெடுக்கப்பட்ட தாமிரப் பட்டயம் ஒன்றில் உள்ளது. இதன் பின்னர் மஹாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் சில காலத்துக்கு இந்த எழுச்சூரில் நல்லிணக்கீஸ்வரர் ஆலயத்திலேயே தங்கியிருந்து, முக்தி அடைந்தார் என்றும் சொல்லப்படுகிறது. இதற்குச் சான்றாக 54-வது ஆச்சார்யரின் ஜீவசமாதி (அதிர்ஷ்டானம்) இந்த ஆலய வளாகத்தில் நல்லிணக்கீஸ்வரர் சன்னதிக்குப் பின்புறம் அமைந்துள்ளது. காஞ்சி மகா பெரியவாளுக்கு, 54-வது ஆச்சார்யரின் அதிர்ஷ்டானம் சம்பந்தப்பட்ட தகவல் ஒரு கட்டத்தில் தெரிய வந்தது.

 அதோடு இந்த ஆலயம் மிகவும் பழுதடைந்து இருப்பதைக் கேள்விப்பட்ட மகா பெரியவா, தன் சிஷ்யர்கள் சிலரிடம் இந்த ஆலயம் சீரமைக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி எழுச்சூருக்கு அனுப்பி வைத்தாராம். காஞ்சிக்கும் எழுச்சூர் ஆலயத்துக்கும் ஏராளமான தொடர்புகள் இருந்துள்ளன. இந்த ஆலயத்தைப் புதுப்பிக்க வேண்டியது காஞ்சி மடத்தின் கடமை. புனர் நிர்மாணப் பணிகளுக்கு ஆகும் செலவுகளை விசாரித்து வாருங்கள். எத்தனை கோடி ரூபாய் ஆனாலும் அதைச் செய்ய வேண்டியது நமது கடமை என்று கூறி அனுப்பினாராம். அந்த விசுவாசச் சீடர்களும் எழுச்சூருக்கு வந்து விசாரித்து, தகவல்களைச் சேகரித்துச் சென்றனர். தனது காலத்துக்குள் இந்த ஆலயம் கம்பீரமாக எழும்பிவிட வேண்டும் என்று மகா பெரியவா விரும்பி இருந்தாராம். ஆனால், அது நடைபெறாமல் போய்விட்டது.

சுமார் 1200 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் இந்தக் கோயில் அப்போது ராஜ கோபுரத்துடன் பிரமாண்டமாக நிமிர்ந்து நின்றிருந்ததாம். அந்தக் காலத்தில் எழுச்சூர் கிராமத்தில் நானூறுக்கும் மேற்பட்ட அந்தணர்கள் குடும்ப சமேதராக வசித்திருந்தனராம். ஏராளமான வெளியூர் மக்கள் வந்து வழிபட்டுச் செல்லும் தலமாக இந்த எழுச்சூர் ஆலயம் விளங்கியதாம்.

நம்பிக்கைகள்:

கணவன் மனைவி ஒற்றுமையாக வாழவும், ஒவ்வொருவரும் தம்மை சார்ந்தவரோடு இணக்கமாக இருக்க இங்குள்ள நல்லிணக்கீஸ்வரரைப் பிரார்த்தனை செய்கின்றனர். தவிர, நல்ல குரல் வளம் வேண்டுவோர் (பாடகர்கள்), பேச்சாளர்கள், அரசியலில் பிரகாசிக்க விரும்புபவர்கள் நல்லிணக்கீஸ்வரருக்கும், நந்தி தேவருக்கும் பால் மற்றும் தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் பலன் கிடைக்கும். செவ்வாய் தோஷமுள்ள ஆண்- பெண் இரு பாலாரும் தோஷ நிவர்த்தி பெற இங்குள்ள ஆறுமுகரை வணங்குவது சிறப்பு.

சிறப்பு அம்சங்கள்:

ஏறத்தாழ இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் கோயில் அமைந்துள்ளது. இயற்கை எழிலும் மண் மணமும் கொஞ்சும் அழகான கிராமம் எழுச்சூர். மன்னர்களின் மான்யங்கள், மகான்களின் அருளாசி, விக்கிரகங்களின் வியப்பான கலைநுணுக்க வேலைப்பாடுகள் என்று எழுச்சூருக்கே உரித்தான ஏராளமான சிறப்புகளும் உண்டு. கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணுதுர்க்கை போன்ற விக்கிரகங்கள் உள்ளன. இந்தப் பிரகாரத்தில் விநாயகர், சூரியன், கால பைரவர், வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகன்,சண்டிகேஸ்வரர் சன்னதிகள், 54-வது காஞ்சி பீடாதிபதியான வியாசாசல மஹாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிர்ஷ்டானம் போன்றவை உள்ளன. மகாவிஷ்ணுமற்றும் தாயார் விக்கிரகங்கள் கருடாழ்வார், ஆஞ்சநேயரோடு ஆலயத்தின் பின்பகுதியில் உள்ளன.

மகா மண்டபத்தின் வலப்பக்கத்தில் தெற்குத் திசை நோக்கி, நின்ற கோலத்தில் தெய்வநாயகி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். இந்த விக்கிரகத்தின் கால் விரல்கள் மற்றும் நகங்கள், சேலை கட்டியுள்ள மடிப்புகள் போன்றவை தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன. திருமணம் தடைப்படுபவர்களுக்கு இந்த அம்மன் பெரிய வரப்பிரசாதம். அம்பாளிடம் ஒரு மஞ்சள் சரடை வைத்து மூன்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு அங்குள்ள தல விருட்சங்களுள் ஒன்றான பெண் பனை மரத்தில் இந்த மஞ்சள் சரடைக் கட்டிவிட்டால், 90 நாட்களுக்குள் திருமண பாக்கியம் ஏற்படும். குழந்தை பாக்கியம் வேண்டுவோர் மற்றொரு தலவிருட்சமான ஏறழிஞ்சில் மரத்தின் முன் ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்துவிட்டு அம்பாளுக்கு 21 நெய் தீபம் ஏற்றி வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

இங்கு வள்ளி-தெய்வானை சமேதராக ஒரே கல்லில் திருவாசியுடன் கூடிய வடிவமைப்பில் ஆறுமுகப் பெருமான் தேவ மயில் மீது அமர்ந்து ஒரு காலைத் தொங்க விட்டுக் கொண்டும் மற்றொரு காலை மடக்கி வைத்துக் கொண்டும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஆறுமுகரைப் பார்த்துக் கொண்டு அவருக்கு எதிரே மயில் வாகனம் கம்பீரபீ மாகக் காட்சி அளிக்கும். ஆறுமுகப் பெருமான் தமது வலப் புறத்து ஆறு கைகளில் வர முத்திரையும், சக்தி, அம்பு, கத்தி, சக்கரம், பாசம் போன்ற ஐந்து ஆயுதங்களையும், இடப் புறத்து ஆறு கைகளில் அபய முத்திரையும், வஜ்ரம், வில், கேடயம், சங்கு, அங்குசம் போன்ற ஆயுதங்களையும் தாங்கி உள்ளார்.

திருவிழாக்கள்:

      மாதாந்திர பிரதோஷம் மற்றும் சிவராத்திரி பிப்ரவரி-மார்ச் மாதங்களில் கோவிலில் அனுசரிக்கப்படுகிறது.

காலம்

1200 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

எழுச்சூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தாம்பரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top