Monday Sep 16, 2024

அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில், சென்னை

முகவரி

அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில், எலியட்ஸ் கடற்கரை சாலை, பெசன்ட் நகர் சென்னை மாவட்டம் – 600090.

இறைவன்

இறைவன்: மகாவிஷ்ணு, இறைவி: அஷ்டலட்சுமி

அறிமுகம்

அஷ்டலட்சுமி கோயில் சென்னையின் பெசன்ட் நகர் பகுதியில் எலியட்ஸ் கடற்கரையின் இறுதியில் உள்ளது. அஷ்டலட்சுமிகளுக்காக அமைக்கப்பட்ட இக்கோயில் நான்கு நிலைகள் கொண்ட கோபுரங்களுடன் கூடியதாகும். அட்ட (எட்டு) இலட்சுமிகளும் நான்குநிலைகளில் நிறுவப்பட்டுள்ளனர். முதல் தளத்தில் ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரியலட்சுமி உள்ளனர். முதல்தளத்தில் மகாலட்சுமியும் மகாவிஷ்ணுவும் உள்ளனர். கோயில் தரிசனத்தை இங்கிருந்தே துவக்குவர். சில படிகள் ஏறி மூன்றாம் தளமடைந்தால் அங்கு சந்தான லட்சுமி, விசயலட்சுமி வித்தியா லட்சுமி மற்றும் கசலட்சுமி சன்னதிகளைக் காணலாம். மேலேறினால் உள்ள நான்காம் தளத்தில் தனியாக உள்ள தனலட்சுமியைக் காணலாம். சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் என்ற ஊரில் இருக்கும் பெருமாள் கோயிலைப் போலவே இக்கோயில் அடுக்கடுக்காக கட்டப்பட்டுள்ளது மிகவும் விசேஷம். அருமையான சலவைக் கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் உள்ள சுதைகள் மிகவும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.

புராண முக்கியத்துவம்

காஞ்சி சங்கர மடத்து பெரியவர் சந்திரசேகர சரசுவதி அவர்களின் விருப்பப்படி அட்டலட்சுமி கோயில் இக்கடற்கரையில் கட்ட 1974-ஆம் ஆண்டில் அடிக்கல் நடப்பட்டது. 5 ஏப்ரல் 1976-இல் அஹோபில மடத்தின் 44வது ஜீயர் வேதாந்த தேசிக யதீந்திர மகாதேசிகன் தலைமையில் அஷ்டலட்சுமி கோயில் குடமுழுக்குடன் நிறுவப்பட்டது. அஷ்டலட்சுமி கோயில் 65 அடி நீளம், 45 அடி அகலம் கொண்டது. இலக்குமியின் அட்டலட்சுமி வடிவங்கள் கோபுரத்தின் நான்கு நிலைகளில் உள்ள ஒன்பது சன்னதிகளில் அமைத்துக் கட்டப்பட்டது. அட்டலட்சுமிகளைத் தவிர பத்து தசாவதார அவதாரங்களுக்கும் குருவாயூரப்பன், கணபதி, தன்வந்திரி மற்றும் அனுமன் சன்னதிகளும் உண்டு.

நம்பிக்கைகள்

இங்கு அஷ்ட லட்சுமிகளாக அருள் பாலிக்கும் மகாலட்சுமியை வணங்கினால் சிறப்பு வாய்ந்த வாழ்க்கை அமையப்பெறலாம். தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கும் ஒவ்வொரு தெய்வங்களும் தனித்தனி சிறப்பை பெற்றதாக உள்ளது. உடல்நலம்பெற ஆதிலட்சுமியையும், பசிப்பிணி நீங்க தான்யலட்சுமியையும், தைரியம் பெற தைரியலட்சுமியையும், சவுபாக்கியம் பெற கஜலட்சுமி யையும், குழந்தைவரம் வேண்டுமெனில் சந்தானலட்சுமியையும், காரியத்தில் வெற்றி கிடைக்க விஜயலட்சுமியையும், கல்வி ஞானம் பெற வித்யாலட்சுமியையும், செல்வம் பெருக தனலட்சுமியை வணங்குதல் நலம். வேண்டிய வரங்கள் எல்லாம் கிடைக்கும் இத்தலத்தில் அபிஷேக ஆராதனைகள்,புடவை சாத்துதல் ஆகியவையும், பிரசாதம் செய்து விநியோகிப்பதும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் முக்கிய நேர்த்தி கடன்களாக உள்ளது

சிறப்பு அம்சங்கள்

கோபுரத்தில் ஓம்கார வடிவத்தில் அஷ்டாங்க விமானத்துடன் கூடியதாக திருக்கோயில் அமைந்துள்ளது. (ஓம்கார சேத்திரம்) கோபுரத்தின் நிழல் பூமியில் விழாது. இது தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் சிறப்பை ஒட்டி அமைந்துள்ளது. அஷ்டலட்சுமிகளும் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள். கடல் அருகே அமைந்திருக்கும் அழகிய திருக்கோயில். பெருமாள் நின்ற கல்யாணத் திருக்கோலம். தாயார் 9 கஜம் (மடிசார்) புடவை கட்டி அருளுகிறார்.

திருவிழாக்கள்

புரட்டாசி நவராத்திரி திருவிழா 10 நாட்கள் இத்தலத்தில் பத்து விதமான அலங்காரங்களில் திருவிழா நடைபெறும் இத்திருவிழாவின் போது பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுவர். தீபாவளி, லட்சுமி பூஜை, தை வெள்ளி, ஆடி வெள்ளி ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அடையாறு

அருகிலுள்ள இரயில் நிலையம்

சென்னை

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top