Thursday Sep 19, 2024

எண்ணிக்கை வடிவங்களில் விநாயகர்

முழு முதற்கடவுளான  விநாயகப்பெருமான்  உலகெங்கும்  போற்றும் தெய்வமாகத் திகழ்கின்றார்.  இவரை ஒரு  விநாயகர் முதல்  கோடி விநாயகர் வரை எண்ணிக்கை  வடிவங்களில்  வழிபடுவதை  இங்கே காண்போம்.

1. ஏகதந்தன்

                ஏகம் என்பது ஒன்றைக் குறிப்பது.  ஏகாட்சரன், ஏகதந்தன், ஒற்றைக்கொம்பன், ஒற்றை மழுவன் என ஒன்று எண்ணிகையில், விநாயகர் வணங்கப்படுகின்றார்.

2. இரட்டைப் பிள்ளையார்

                ஒரு தெய்வத்தை இரண்டாக வைத்து வழிபடும் வழக்கம்,  பலநூறு ஆண்டுகளாகத் தொடர்கிறது. இவர் இரட்டைப் பிள்ளையார் என வழங்கப்படுகின்றார்.  இந்த அமைப்பு தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இன்றும் காணப்படுகின்றன.

3. மா, பலா, வாழை உண்ணும்  மூஷிக வாகனன்

                 மா, பலா, வாழை எனும் முக்கனிகளை விரும்பி உண்ணும் மூஷிக வாகனன் என அழைக்கின்றனர்.  முக்கனிகளை இறைவனுக்குப் படைக்க நிபந்தங்கள் ஏற்படுத்திய செய்தியை,  தஞ்சாவூர் பெரிய கோயில் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன.

                முச்சந்தி விநாயகர், மும்மூர்த்தி விநாயகர்,  மும்முக விநாயகர், மும்முடி விநாயகர், முக்குறுணி விநாயகர் (மூன்று குருணி),  மூவடுக்கு விநாயகர்,  முக்கால விநாயகர்,  மும்மதத்தன் என மூன்று விநாயகருக்குப் பெயர்கள்  வழங்கப்படுகின்றன.  திருவான்மியூர், மருந்தீசுவரர் திருக்கோயில்  மூன்று விநாயகர் சன்னதி அமைந்துள்ளது.

4.சதுர்முக விநாயகர்

                சதுர் என்பது நான்கைக் குறிக்கும்.  அரிய  கோலமான பிரம்ம கணபதியாக கட்சிக்கும் இவர்,  சதுர்முக விநாயகர் என்று அழைக்கப்படுகின்றார்.  விநாயகர் சதுர்முகி,  சதுக்கப் பிள்ளையார் என்ற பெயரை சில தலங்களில்  அழைக்கப்படுகிறது.  சூரிய மண்டலத்தில் வீற்றுள்ள கணபதி, சௌர விநாயகர் என்று அழைக்கப்படுகின்றார்.

5. பஞ்சபூத விநாயகர்

               பஞ்சலிங்கப் பிள்ளையார்,  பஞ்சபூத விநாயகர், பஞ்சாட்சர விநாயகர், பஞ்சசந்தி விநாயகர், பஞ்சமுக விநாயகர், ஐம்கலக்காசு விநாயகர் அமைந்துள்ளனர்.  ஐங்கலக்காசு விநாயகர் திருவாரூரில்  மூலட்டநாதர் சன்னதி  அருகேயும், பஞ்ச சந்தி விநாயகர்  காஞ்சிபுரம்  கச்சபேசுவரர் கோயிலில், ஐந்துமுக விநாயகர் வடிவங்கள் அமைந்துள்ளன.

7. சப்தவிடங்க விநாயகர்

                சிவபெருமானின் உற்சவத் திருமேனிகள்  வடிவம் திருவாரூர்,  திருக்காரவாசல்,  திருக்கோளிலி,  திருநள்ளாறு,  நாகப்பட்டினம், திருமறைக்காடு,  திருவாய்மூர் என சப்தவிடங்கத் தலங்களில்  வாழும் விநாயகர், சப்தவிடங்க விநாயகர்  என அழைக்கப் படுகிறார்.

8. எண்திசை விநாயகர்

                திருவண்ணாலை, திருக்கடையூர் தலங்களில் மாடவீதிகளின் எட்டுத் திசைகளிலும் எட்டு விநாயகர் ஆலயங்கள் அமைந்துள்ளன.  இவரே எண்திசை விநாயகர் என அழைக்கப்படுகின்றார். இது தவிர, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா என எட்டு இடங்களில் இருந்து வழிகாட்டும் விநாயகர் அஷ்டமூர்த்திகள் விநாயகர்  என்று அழைக்கப்படுகிறார்.

                சிவபெருமானுக்கு அட்டவீரட்டத் தலங்கள் உள்ளதுபோல,  விநாயகப் பெருமானுக்கு  மகராஷ்டிரா மாநிலத்தில்  அஷ்ட கணபதிகள், எட்டு தலங்களில் அமைந்துள்ளன.

9. நவசக்தி விநாயகர்

                நவரத்தினங்களால் ஆன  விநாயகரை,  நவரத்தின விநாயகர் என்று அழைக்கின்றனர்.  இதே போல, நவக்கிரக விநாயகர், நவசக்தி விநாயகர், நவசந்தி விநாயகர் என  ஒன்பது எண்ணிக்கையில், விநாயகர் வழங்கப்படுகின்றார்.  மயிலாப்பூர் லஸ்  கார்னரில் புகழ்பெற்ற நவசக்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது.

11. ஏகாதச விநாயகர்

                ஏகாதசம் என்பது  பதினொன்றைக் குறிக்கும் சொல்.  சிவபெருமானிடம்  தோன்றிய ருத்திரர்களை, ஏகாத ருத்திரர்கள் என்பது  வழக்கம்.  இதேபோல, விநாயகரை பதினோரு வடிவங்களில்  அமைத்து வழிபடும் தெய்வம் ருத்ரகணபதி ஆகும்.

                திருவள்ளூர் மாவட்டம்,  திருப்பாசூர் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலத்தில் ஒரே இடத்தில் பதினோரு பிள்ளையார்கள் அமைந்துள்ளனர்.  இதை “விநாயகர் சபை” என அழைக்கின்றனர்.

12.பன்னிரு  திருநாம விநாயகர்

                பன்னிரு சூரியர்கள் விநாயகரை வணங்கும் போது, பன்னிரண்டு வடிவங்களாக  விநாயகர் காட்சியளித்தார் என “விநாயகர் புராணம்”  குறிப்பிடுகிறது. இந்தப் பன்னிரு விநாயகரைப் பாடித் துதித்ததால்,  ஆயிரம் பெயர்களைச் சொல்லி வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

32. சோடச கணபதி

                விநாயகர் தன் பக்தர்களைக் காத்தருள பல்வேறு வடிவங்களைக் காட்டியருளினார்  என்றாலும்,  அவற்றில் 32 வடிவங்களை மட்டுமே பெருமைப்படுத்தி கூறுகின்றனர்.

51 விநாயகர்

                லலிதாபரமேஸ்வரி வழிபாட்டில் 51 விநாயகர் பெயர்களும்,  அவருக்கான  தேவியரின் பெயர்களும்  இடம் பெற்றுள்ளன.

57  விநாயகர்

                காசி மாநகரில்  ஏழு ஆவரணங்களில்  தலா எட்டு பேர் வீதம் ஐம்பத்து ஆறும்,  நடுவில்  ஆதி மூர்த்தியாக, துண்டி விநாயகரும்  சேர்ந்து, 57 விநாயகர் அமைந்துள்ளனர்.

108 விநாயகர்

                சமய வழிபாட்டில் 108க்கு  தனிச்சிறப்பு உள்ளது.  108 சிவலிங்கங்கள்,  108 சக்தி பீடங்கள், 108 திவ்ய தேசங்கள் இதனை உறுதி செய்கின்றன.

                திருவள்ளூர் மாவட்டம்,  சின்னக்காவனம் தலத்தில் அகத்தியர் உருவாக்கிய விநாயகர், 108 சிவலிங்கத்தின் ஒருங்கிணைப்பு என தலபுராணம் கூறுகிறது. இதேபோல,  திண்டுக்கல் நகரில் நன்மை தரும் விநாயகர் கோயிலில் 108 விநாயகர் அமைந்துள்ளார்.

500.ஐந்நூற்றுவர்

                நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கடையூர்  உடைய  தலத்தில் உள்ள  விநாயகர்  ஐந்நூற்றுவர்    என்ற  திருப்பெயர் வழங்கப்படுகிறது.

1000- கரும்பாயிரம் விநாயகர்

                கும்பகோணம்  கும்பேசுவரர் கோயிலில்  கரும்பாயிரம் விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது.  இத்தலத்து விநாயகர், பக்தரின் வேண்டுதலை நிறைவேற்றி, ஆயிரம் கரும்புகளைக் காணிக்கையாக  ஏற்றதால், விநாயகருக்கு இப்பெயர் வழங்கலானது.

2008 – விநாயகர்

                திருவாலவாய் உடையார்  திருவிளையாடல் புராணம்  எழுதிய  பெரும்பற்றப்புலியூர்  நம்பி தோன்றிய ஊரான  வேம்பத்தூரில் உள்ள விநாயகர், 2008 விநாயகர் என வழங்குகிறார்.  மழை வேண்டி 2008 விநாயகரை வைத்து  வேள்வி செய்ய மழை பெய்தது.  அதற்கு நன்றிக்கடனாக  2008  அந்தணருக்கு  வீடு, நிலம், தந்ததாகத் தலவரலாறு கூறுகிறது.

4000  பிள்ளையார்

                நெல்லை மாவட்டம்,  கல்லிடைக்குறிச்சி  அடுத்த கோசக்குடியில் உள்ள விநாயகர் நாலாயிரம்  பிள்ளையார்  என அழைக்கப்படுகிறார். நான்காயிரம்  அந்தணர்களை ஆதரித்து உருவான விநாயகர் என்பதால், இப்பெயர் வழங்கலானது.

48000 பிள்ளையார்

                திருநெல்வேலி  நெல்லையப்பர்  திருக்கோயில்  பொள்ளாப்பிள்ளையார் சன்னதி பிள்ளையாருக்கு   நாற்பத்தெட்டாயிரம் பிள்ளையார் என்ற பெயர் வழங்கப்படுகிறது.                 இப்பகுதியில் வாழ்ந்த வேளாளர்கள் தங்கள் பாதுகாப்புக்காக உருவாக்கிய  சேனையின் எண்ணிக்கையே, விநாயகருக்கும் வந்துவிட்டது.  இதனை  இங்குள்ள கல்வெட்டு உறுதிசெய்கிறது.

கோடி  விநாயகர்

                சுவாமிமலை அருகே உள்ள கொட்டையூர் சிவபெருமான்  கோடி வடிவம் கொண்டு காட்சி  தர, சிவபெருமான் கோடீஸ்வரர்  என அழைப்பது போல, இத்தலத்து விநாயகர், கோடி விநாயகர் என்றும், முருகன், கோடி முருகன் என்று அழைக்கப்படுகின்றனர்.

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top